ரூபாயில் சர்வதேச வர்த்தகம்: பிரதமர் மோடி விருப்பம்
புதுடில்லி : ”சர்வதேச அளவிலான வர்த்தகம் மற்றும் பொருட்கள் வினியோக முறைகளில், இந்திய வங்கிகள் மற்றும் ரூபாய் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.நாட்டின், 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இதன் ஒரு கட்டமாக, ஒரு வார சிறப்பு கொண்டாட்டத்துக்கு, மத்திய நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘ஜன் சமர்த்’ எனப்படும் மத்திய அரசின் கடன் திட்டங்களை அறிந்து கொள்வதற்கான இணைய தளத்தை மோடி துவக்கி வைத்தார். மேலும், 75வது சுதந்திர தினத்தையொட்டி, 1, 2, 5, 10, 20 ரூபாய் மதிப்புள்ள புதிய நாணயங்களையும் அவர் வெளியிட்டார். பார்வை திறன் இல்லாதவர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த நாணயங்களில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:நிதித்துறை சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இணைய தளங்கள் உட்பட பல வசதிகளை செய்துஉள்ளோம்.
இதை மக்கள் முழுமையாக தெரிந்து, பயன்படுத்திக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.நம்முடைய நிதி சேவை திட்டங்கள், தீர்வுகள் சர்வதேச அளவுக்கு விரிவடைய வேண்டும். சர்வதேச அளவிலான வர்த்தகம், பொருட்கள் வினியோக முறைகளில் இந்திய வங்கிகள் மற்றும் ரூபாய் முக்கிய பங்கை வகிக்க வேண்டும்.நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட்டால், இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும் என்பதை, கடந்த எட்டு ஆண்டுகளில் பலமுறை நிரூபித்துஉளோம். தற்போது உலக நாடுகள், இந்தியாவை வெறும் சந்தையாக பார்க்கவில்லை. புதிய மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் நாடாக பார்க்கின்றன.
ஒரு காலத்தில், அரசு வழங்கும் மானியங்கள், திட்டங்கள், கடன்களைப் பெறுவதற்கு மக்கள் நடையாய் நடக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அரசின் செயல்பாடுகள் மாறியுள்ளன. மக்கள் நலனைச் சார்ந்ததாக அரசின் நிர்வாகம் உள்ளது.அதன்படியே, அரசின் கடன் திட்டங்களை தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும், பல தளங்களை தேட வேண்டிய அவசியம் இனி இல்லை. ஜன் சமர்த் இணையதளத்தில் அனைத்து விபரங்களும் கிடைக்கும்.தொழில்கள் செய்வதற்கு தடையாக இருந்த, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதிகள், 1,500க்கும் மேற்பட்ட சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இளைஞர்கள் தொழில்கள் செய்வதை சுலபமாக்கியுள்ளதுடன், அவர்கள் புதிய உச்சத்தை எட்டவும் வாய்ப்பு தரப்படுகிறது.வரி முறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மாதத்துக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூல் செய்யப்படுகின்றது.நாட்டில் தற்போது, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
